அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் ,

 பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான், துர்வாச முனிவரிடம்,”இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து சிவனை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும்” என்றார். அதன்படி, துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்றுகூடிக் குளம் அமைத்து, இறைவனைப் பூஜைசெய்தனர். முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன், பொங்கிவந்த கடலை, அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்து கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு “துர்வாச நாயினார்” என்ற பெயரும் உண்டு.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம்,”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்” என்று உறுதி மொழி கொடுத்தார். திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது, காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.

மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், “இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடித் தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்” என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம்.

இங்குள்ள அனைத்து விக்ரகங்களும் விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது என்பர். சனிபகவான் தெற்கு பார்த்து அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் “சித்தி விநாயகர்” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள இறைவனுக்கு பாலபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் வழிபாடு செய்கின்றனர்.