மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செய்ய வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக  5 பேர் கைது  செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவரது  உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, ராணுவ வீரர் உடலுக்கு தமிழக அரசின் சார்பில்  அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தார். அமைச்சர் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற அமைச்சரின்  காரை நிறுத்தி பாஜகவினர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அமைச்சரின் கார்மீது பெண் ஒருவரின் செருப்பு ஒன்று வந்து விழுந்தது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து அமைச்சர் கார்மீது  காலனி வீசிய சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்து அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பா

ஜக மாவட்ட துணைத்தலைவர் குமார் (48), பிரசார பிரிவு செயலாளர் பாலா (49), கோபிநாத் (42), ஜெய கிருஷ்ணா (39), கோபிநாத் (44), முகமது யாகூப் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் (முன்னாள் திமுக எம்எல்ஏ), அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராணுவ வீரர் லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்டார். அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது.  அதிமுகவை பார்த்து வெளியே போக சொல்லாதவர், பாஜகவை காழ்ப்புணர்ச்சியோடு வெளியே போக சொல்லி உள்ளார். தரம் தாழ்ந்து அமைச்சர் இன்று நடந்து கொண்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பியவர், பிடிஆர்  எங்கு சென்றாலும் அவருக்க எங்களது எதிர்ப்பை பதிவு செய்வோம். அறவழியில் போராடுவோம் என்றவர், நீங்கள் சட்டரீதியாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்களும் சட்ட ரீதியாக அணுகுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.