சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,  கொரோனா பரவலைத் தடுக்க விரிவான மூன்றடுக்கு திட்டத்தை உருவாக்குவது பற்றி அரசின் உயர் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள்  ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு (2020) கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதே பாணியில் தமிழகத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2 பீகார் அதிகாரிகள் தமிழகத்தின் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தலைமையில், தேர்தலை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், கொரோனா பரவலை தடுக்க மூன்றடுக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையம் பல்வேறு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது.

அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரசாரத்திற்கு செல்லும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிரசாரத்திற்காக வீட்டுக்கு வீடு செல்லும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.

சாலைகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்போது தொடர்ந்து 5 வண்டிகளுக்கு மேல் செல்லக் கூடாது.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

இதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுக்கூட்டம் நடக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் நுழைவு வாயில், வெளி வாயிலை குறிப்பிட வேண்டும்.

அங்கு மாநில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அதோடு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தேர்தல் நடவடிக்கையின் போதும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான ஒவ்வொரு அறை, அரங்கங்கள், வளாகங்கள் அனைத்தும் தொற்று பரவல் தடுப்புக்கான வகையில் சீர்படுத்தப்பட வேண்டும்.

அங்கு உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர், சோப், தண்ணீர் வசதி இருந்தாக வேண்டும்.

சமூக இடைவெளி உள்ளிட்ட மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

எலக்ட்ரானிக் வாக்கு எந்திரம், விவிபேட் எந்திரம் ஆகியவற்றை கையாளும் அனைவரும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கும் வகுப்புகள் அனைத்தும் பெரிய அரங்கங்களில் நடத்தப்பட வேண்டும்.

அதிகாரிகளுக்கு இடையேயான பயிற்சிகள், ஆன்லைனில் நடத்தப்படலாம்.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் தயார் செய்யப்பட வேண்டும்.

வாக்குச்சாவடிகள் அனைத்தும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு அன்று கொரோனா தொற்று அறிகுறிகள் தெரியவரும் தேர்தல் அலுவலரை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு அவருக்கு பதிலாக பணியாற்றக் கூடிய அலுவலரை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடியின் வெளியே உடல் வெப்ப பரிசோதனை கருவி வைக்கப்பட வேண்டும்.

வாக்குச்சாவடிக்கு வெளியே மருத்துவ அலுவலர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

வாக்காளர் யாருக்காவது உடல் சூடு, தொற்று அறிகுறி தென்பட்டால், அவருக்கு டோக்கன் அளித்துவிட்டு, கடைசி ஒரு மணிநேரத்திற்கு முன்பு கொரோனா தடுப்பு உபகரணங்களுடன் வந்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

டோக்கன் வழங்குவதற்கான உதவிப் பிரிவு அமர்த்தப்பட வேண்டும்.

வாக்காளர்கள் வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளிக்கான (6 அடி இடைவெளியில்) வட்டம் போடப்பட வேண்டும்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கைகளுடன் கூடிய தனி காத்திருப்பு பகுதி அமைக்கப்பட வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வராத வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு அவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு படங்கள், வாசகங்களை ஆங்காங்கு வைக்க வேண்டும்.

வாக்குப்பதிவு அல்லது வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சி முகவர் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால், அவரை அப்புறப்படுத்திவிட்டு மாற்று முகவரை நியமிக்க வாக்குச்சாவடி முதன்மை அதிகாரி அனுமதிக்க வேண்டும்.

வாக்காளரை அடையாளம் காண்பதற்காக வாக்குச்சாவடி அலுவலர் கேட்கும்போது முகக்கவசத்தை கீழே இறக்கலாம்.

கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க வரும்போது மருத்துவத் துறை அலுவலர்கள் அங்கிருக்க வேண்டும்.

இதை பின்பற்றாதவர்களுக்கு எதிராக பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவற்றோடு, மாநில அளவில் அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி விரிவான திட்டங்கள் உருவாக்கப்படும்.

மேலும் 3 அடுக்கு திட்டத்தையும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.