ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்தியாவின் புண்ணிய தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்குள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்.  இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி இறந்து போன தங்களது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

இன்று ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் இறந்து போன தங்களது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபடவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இங்கு அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக மிக பலத்த மழை பெய்தது. பக்தர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடிவிட்டு கோவிலின் ரதவீதி சாலையில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.