சென்னை: சுதந்திர போராட்ட தியாகி, கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்” எனப் பெயர் சூட்டி, பெயர் பலகையினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

1904 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பிறந்தவர் தான் திருப்பூர் குமரன். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் இவர் இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்துள்ளார். திருப்பூரில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்ட திருப்பூர் குமரன் பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார். அதன் பின் 1932 ஆம் ஆண்டு காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இது தான் இவரது கடைசி போராட்டம்.

இந்த போராட்டத்தின் பொழுது காவலர்கள் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி குண்டு தாக்குதலின் போதும் வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று முழங்கியவர் திருப்பூர் குமரன். மேலும் தனது இறுதி மூச்சுவரை தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து,  தியாகி “கொடி காத்த குமரன்”.அவர்களின் பிறந்த நாளைபெருமைப்படுத்தும் விதமாக ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத்நகர் பிரதான சாலைக்கு “தியாகி குமரன் சாலை சம்பத் நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக அரசின் அனுமதி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சம்பத் நகர் பிரதான சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்” எனப் பெயர் சூட்டி, பெயர் பலகையினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.