சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிராக,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், திருமாவளவன் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நவம்பர் மாதத்துக்கு  தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “பேரணிக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண் டும். மாறாக, குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை,  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.