சென்னை

ங்கள் பாப்புலாரிடியை வைத்து முதல்வராக வேண்டும் என நினைப்பது தமிழகத்தின் சாபக்கேடு என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதிமுக சார்பில் நேற்று தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கையொப்பம் பெற்றார்.

அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம்,

”எந்தப் பருவத்திலும் பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் வரலாம் என்பதில் தவறில்லை. அதே வேளையில் முதலில், மக்களுக்குத் தொண்டு செய்து கள வேலை செய்த பின்பு ஆட்சி குறித்து கனவு இருக்க வேண்டும்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமா என்ற பாப்புலாரிட்டியை வைத்துக்கொண்டு முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். இந்த சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது.  வேறு எங்கும் இப்படியில்லை.

இங்கு மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து, இறுதியில் மார்க்கெட் இல்லாதபோது அரசியலுக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள்..நடிகர் விஜய் அப்படி இல்லாமல் தொண்டுள்ளத்தோடு அரசியலுக்கு வந்தால் வரவேற்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இத்தனை காலம் சம்பாதித்துவிட்டோமே இனிமேல் அரசியலுக்குச் சென்றால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனத் திரைத் துறையில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்  இது போலக் கிடையாது.

நான் விஜய்க்கு மட்டும் இதைச் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறேன்.   நடிகர் விஜய் கோல்வால்க்கரை படியுங்கள், சாவர்க்கரை படியுங்கள் என்று சொல்லாமல் அம்பேத்கர், பெரியாரைப் படிக்கச் சொன்னதற்கு என்னுடைய வாழ்த்துகள்”

என்று கூறி உள்ளார்.