சென்னை

ன்று  முதல் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுக்கு மது விற்பனை மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த 2003-04-ம் நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சமாக இருந்த இந்த வருவாய் 2022-23-ம் ஆண்டில் ரூ.44 ஆயிரத்து 98 கோடியே 56 லட்சமாக அதிகரித்தது.

ஆனால் மதுபானங்கள் பல குடும்பங்களின் சீரழிவுக்குக் காரணமாக அமைவதால் மதுக்கடைகளை மூட வேண்டும் .என்ற வேண்டுகோளும் தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்ற உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அதிரடி அறிவிப்பு இடம் பெற்றது.

இதைத் தொடர்ந்து. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு மிக அருகில் இருக்கும் கடைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பகுதியில் உள்ள கடைகள், மத வழிபாட்டுத் தலங்களின் அருகில் உள்ள கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டுள்ள 500 மதுக்கடைகள் இன்று  முதல் மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அதிகபட்சமாகச் சென்னையில் 61 கடைகளும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கடைகளும் மூடப்படுகின்றன.