சென்னை: ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு  அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதைத் தொடர்ந்து, ரூ.300 கோடி செலவில் மேம்படுத்த ஒருங்கிணைந்த பெருந்திட்டம் ஒன்று தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி,  திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரத்தை தரிசிக்கும் அளவுக்கு கட்டிடங்களை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்ததிட்டம் குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவான மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாலைமுரசு நிர்வாக இயக்குனர் மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், எச்சிஎல். நிறுவன துணைத்தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அன்னதானக்கூடம், கீழ் தளம், முதல் தளம் என 1000 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவுக்கு திட்டங்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள்  அறையில் தொலைக்காட்சி பெட்டி, குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுப்பது மற்றும்,  கோவிலை சுற்றி  னைப்பொருட்கள், கடல்சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ளதைவி ட அதிகளவில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது.

அத்துடடன் தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்து மிடம், அவசர ஊர்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தி செய்து கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல் திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்ய என்னென்ன வழிமுறை களை பின்பற்றலாம் என்பது குறித்தும், அங்கபிரதட்சனம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கலாமா? என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் கோவிலில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடித்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.