திரு அன்பில் திருவடிவழகிய நம்பி பெருமாள் கோயில்
பகவான் கருணையே வடிவானவன். பக்தர்களுடைய வேண்டுகோளைப் பிரார்த்தனையால் நிறைவேற்றுபவன். தங்கையா சரணடைகிறார்களோ அவர்களைக் கடைசிவரை ரட் சித்து காப்பாற்றக் காத்திருப்பவன். பெருமாளுக்கு ஜாதி பேதம் என்பது கிடையாது. ஆத்மார்த்தம் முக்கியம். இப்படிப்பட்ட பெருமாள், அன்பின் திருவுருவமாக வடிவாகிய நம்பியாகி திருக்கோலம் பூண்டு நம்மையெல்லாம் காத்து வருகிறார்.
இந்தத் திருக்கோயில் திருச்சி கல்லணை கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் இருக்கிறது. லால்குடிக்கு கிழக்கே எட்டு கிலோமீட்டர் தூரத்தில் நடராஜ புரம் வழியாகவும் சென்று பெருமாளைத் தரிசிக்கலாம்.
திருமலையான் துறை மண்டகபுரி, பிரம்மபுரி என்ற இந்த கோயிலுக்கு வேறு பெயர்களும் உண்டு. கொள்ளிட நதியின் வடக்கு பக்கம் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் 3 நிலை ராஜகோபுரம் உடையது. எல்லாமே கிழக்குப் பக்கம் தான்.
இந்த பிரகாரத்தின் கருவறையில் மூலவர் திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீசுந்தரராஜன் தாயார் அழகிய வல்லி நாச்சியார் என்ற திருப்பெயர் கொண்டவர். இந்த கோயிலின் தீர்த்தம் மண்டுக புஷ்கரணியாகும் விமானம் கொள்ளிடக் கரைக்கேயுரிய விசேஷ தாரக விமானம்.
மண்டூக முனிவர் ஒரு சமயம் தண்ணீருக்குள் மூழ்கி நீண்ட கால தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரை தேடி துர்வாச முனிவர் வந்தார். தவத்தில் மூழ்கியிருந்த மண்டூக முனிவர், துர்வாச முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. வெகு நேரம் காத்திருந்தும் மண்டூக முனிவர் தன்னை காண வரவில்லை என்ற கோபத்தால் துர்வாசர், மண்டூகமுனிவரைத் தவளையாக மாறும்படி சாபமிட்டு விட்டார்.
இதற்குப் பிறகு மண்டூக முனிவர், தன் தவற்றை உணர்ந்து துர்வாச முனிவரிடம் சாபவிமோசனம் கேட்கத் துர்வாச முனிவர் ” இந்த திருத்தலத்தில் உள்ள பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும். மறுபடியும் மனிதனாக மாறலாம் என்று வழிகாட்டினார். அதன்படியே மண்டூக முனிவர் அன்பில் உள்ள திரு வடிவழகிய நம்பி பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.
அன்பில் நாட்டை ஆண்ட சுந்தரச் சோழன் மன்னனுக்குப் போரில் பல வெற்றிகளைத் தந்ததால் இந்த கோயிலுக்கு அரசன் ஏராளமான மானியத்தை வழங்கி இருக்கிறான். பிரம்மாவுக்கும் வால்மீகிக்கும் பகவான் நேரிடையாக தரிசனம் தந்த ஸ்தலம். இந்தக் கோயிலில் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்து இருக்கிறார்கள்.
பரிகாரம்
முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்க வேண்டுமானால் அன்பில் கோவிலுக்கு வந்து மண்டூக புஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தால் போதும். எதிரிகளை வெற்றி பெறவும் போட்டிகளில் வியாபாரத்தில் வெற்றி பெறவும் பொதுவாழ்வில் முன்னுக்கு வரவும் இந்த அழகிய வடிவாகிய நம்பி பெருமாளுக்குப் பால் அபிஷேகம் செய்து வந்தால் போதும். அத்தனை சிறப்பு இந்த அன்பில் பெருமாளுக்கு உண்டு.