சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் வழியில் கடப்பாக்கம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால், பள்ளி குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடு செய்யும் வகையில்  “இல்லம் தேடி கல்வி” திட்டத்தை தமிழகஅரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்காக டூ. 200 கோடி ஒதுக்கி உள்ளளதுடன், முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று மாலை மரக்காணத்தில் நடைபெறுகிறது. இந்தவிழாவுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர், பள்ளி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து மரக்காணம் புறப்பட்டு சென்றார். அங்கு  இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டில், விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் உள்ள திரு. பெ. கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திடீர் ஆய்வு மேற்கொண்டார் என தெரிவித்துள்ளது.