கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தமிழக அரசை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, மாநில அரசு, இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை இலவசமாக கொடுத்துவிட்டு,  அதை டாஸ்மாக் வழியாக பறித்துவிடுகின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மநீம கட்சி சார்பில் கமல்ஹாசன் களத்தில் உள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

கோவையில் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன்,  நேற்று சிங்காநல்லூர் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.  அப்போது, ஆட்சியாளர்களிடம்  நல்ல திட்டங்கள் இருந்தால் இலவசங்கள் கொடுக்க வேண்டியதில்லை. இலவசங்கள் மக்களை சேம்பேறிகளாக்கி விடுகின்றன என்றவர், குடிநீர், உணவு, கல்வி ஆகியவை மக்கள் உரிமை. அவை உங்களை வந்தடைய வேண்டும்.தலைவர்கள் காசுக்கு ஆசைப்படாமல் இருந்தால், அதிகாரிகள் சரியாக இருப்பார்கள். எல்லா ஊர்களிலும் ஆரம்பப் பள்ளிகள் மோசமாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டினார்.

ஒரு  எம்எல்ஏ சீட்டுக்கு கட்சியில் ரூ.10 கோடி வாங்குகின்றனர். அதன்பிறகு, வேட்பாளர்கள் ரூ.20 கோடி செலவு செய்கின்றனர். இவ்வாறு முதலீடு செய்ததை மக்கள் சட்டைப்பையில் இருந்து திருப்பி எடுக்கின்றனர். ஒரு ஊழல் கட்சிக்கு, இன்னொரு ஊழல் கட்சி மாற்றாகாது.

அரசு, இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்துவிட்டு, டாஸ்மாக் வழியாக அதைப் பறிக்கின்றனர்.  பாதி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டும் அரசை நடத்த முடியும். தமிழர் ரத்தத்தில் ஆல்கஹால் ஓடுகிறது. குடியால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும். அது எப்படி இலவசமாகும்?

இவ்வாறு அவர் கூறினார்.