திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மறைந்த கட்சி தொண்டர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், ”சோமாலியா,எத்தியோபியா, வெனிசுலா போன்று நம் நாடு போய்விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். மீத்தேன், ஷேல் கேஸ் என நம் நிலத்தின் மீது அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் கையெழுத்திட்டு, மண்ணையே சீர்குலைத்துவிட்டார்கள். அதனால்,திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை. இது எங்கள் கட்சி கொள்கை முடிவு. நாங்கள் எப்போதும் தன்னிச்சையாகவே தேர்தல் களத்தில் விளையாடுவோம். காங்கிரஸ் இனத்தின் எதிரி, பாஜக மனித குலத்தின் எதிரி. எந்த காலத்திலும் இரண்டு கட்சியுடன் உடன்பாடு வைத்துகொள்ள மாட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் 117 ஆண்கள் 117 பெண்கள் போட்டியிடுவார்கள். ஜனவரி மாதத்தில் வேட்பாளரை அறிவிப்போம். எங்களுக்கு ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் போன்ற கட்சிகளின் ஆதரவு இருக்கிறது.

திருவள்ளுவர் இருந்தபோது இந்தியா என்கிற நாடும் இல்லை. இந்து என்கிற மதமும் இல்லை. நான் மீசை வைத்து பூணூல் போட்டால், என்னை பிராமணர் என்று ஒப்புக்கொள்வார்களா ? எங்கள் காலம் வரும்போது, காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது” என தெரிவித்தார்.