சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு  நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.  வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றதாகவும், இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்புமணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்..

கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காத அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல் அரசின் உத்தரவுகளை மீறிய செயல் மட்டுமல்லாமல் சமூக நீதிக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தார். அரசு பணியாளர் தேர்வாணையம் உட்பட பிற தேர்வு நடைமுறைகளிலும் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், 7382 குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும்கூறி இருந்தார்.

இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி சுபாஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், இது அரசினுடைய கொள்கை முடிவு எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுதாரர் கலப்பு மணம் புரிந்தவர் அல்ல என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை தகுதி இல்லை, எனவே பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.