சென்னை: அண்ணா பல்கலைக்கழக விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்க நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்  ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்பதை சுட்டிக்கட்டி, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி  உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10மணிக்கு தொடங்கியது. அண்ணா பல்கலை.யின் கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்றுள்ளார்.  நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்தியஅமைச்சர் எல்.முருகன்  பங்கேற்றுள்ளனர். விழாவில்  பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

முன்னதாக விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி உள்பட தலைவர்கள்  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வரவேற்று பேசினார். அப்போது, நான் முதல்வன் திட்டம் மூலமாக பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் செய்திருக்கிறார். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்போரின் தமிழ்நாடு தான் முதலிடம் பெற்றுள்ளது. 53 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்கின்றனர்.

நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்ற கூறிய அமைச்சர்,  தொழில்முனைவோரை உருவாக்குவது தான் முதலமைச்சரின் நோக்கம். உயர்கல்வி பயில்வோர் விகிதத்தில் தமிழகம் தான் முதலிடம் எனவும் சுட்டிக்காட்டினார்.

உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. உயர்கல்வி படிப்பில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம். 56.5 சதவீதம் பெண்கள் உயர்கல்வி பயில்கின்றனர். பொறியியல் பட்டம் பெறுபவர்கள் சிறு சிறு தொழில்களை உருவாக்கி தொழில் முறைவோராக வேண்டும். உயர்கல்வித்துறையுடன் வேறு சில துறைகளை இணைத்து நான் முதலான திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்துகிறார். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.