சென்னை,

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகலாம் எனவும் வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதேபோல, அதிகபட்சமாக சிவகங்கையில் 14 சென்டிமீட்டரும், ஆடுதுறை, திருப்புவனத்தில் 7 சென்டிமீட்டரும், பெரம்பலூரில் 6 சென்டிமீட்டரும், மானாமதுரை, கும்பகோணம், ஜெயங்கொண்டத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.