சென்னை,

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவருடைய சிகிச்சை முழுவதும் மர்மமாகவே இருந்தது. அவர் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் வாயிலாக தகவல்களை வெளியிட்டு வந்தது.

ஜெயலலிதா  சசிகலாவால் அடித்து கொல்லப்பட்டார் என்றும், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டார் என்றும், கீழே தள்ளி விடப்பட்டு இறந்தார் என்றும் பல்வேறு யூகங்கள் பொதுமக்களிடையே உலா வருகின்றன.

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்களும், ஓபிஎஸ் அணியினிரும் கோரி வருகின்றனர்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு  செப்டம்பர் 22ந்தேதி இரவு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 72 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ  மருத்துவமனை கூறும்போது,

முதல்வர் உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும்,  அவருக்கு அப்பல்லோ மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர், விரைவில் குணமடைவார்  அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது.

இதற்கிடையில் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை அளிக்க லண்டன் டாக்ர்  ரிச்சர்டு பீலே  3 முறை அவர் சென்னை வந்து சிகிச்சை அளித்தார். பின்னர்  3 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.  சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து பிசியோதெரபிஸ்டுகள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு பிசியோ தெரபி சிகிச்சை மேற்கொண்டடனர்.

இதன் காரணமாக அவர் தேறிவிட்டார் என்றும், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர் விரும்பினால் வீட்டுக்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக பேசினார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் முதல்வர் விரைவில் குணமடைவார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவித்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அப்போது தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், ‘மக்களின் பிரார்தனையால் விரைவில் நலம்பெற்று திரும்புவேன்’ என்று கடந்த 13-11/2016 அன்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதில் ‘ஓய்வு நான் அறியாதது உழைப்பு என்னை நீங்காதது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் உடல்நலம் சற்று தேறியதை தொடர்ந்து கடந்த நவம்பர் 25ந்தேதி செய்தியாளர்களுடன் பேசிய அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக ஸ்பீக்கர் உதவியுடன் பேசி வருகிறார் என்றும் கூறினார்.

முதல்வர் பூரண குணமடைந்தார் என்றும், தற்போது அவருக்கு நடப்பதற்கு தேவையான பிசியோதெரசி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறியது.

இறுதியில் டிசம்பர்  4ந்தேதி  ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்று அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கொடுத்த அறிக்கை ஒன்றை டில்லியில் வெளியிட்டார்.  அதைத்தொடர்ந்து நேற்று மாலை அப்பல்லோவின் அறிக்கையும் வெளியானது.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சரான மா.பா.பாண்டியராஜன் கூறியிருப்பதாவது,

தற்போது எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வேறு மாதிரி உள்ளது. அப்பல்லோ தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை, ஏற்கனவே, ஜெயலலிதா சிகிச்சையின்போது வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

தற்போது புதியதாக இயக்கம் தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும், தற்போது வெளியாகி இருக்கும் மருத்துவமனை அறிக்கைகளை ஏற்க முடியாது என்றும்,  நீதி விசாரணைதான் வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.