மதுரை:

கீழடியில் நடைபெற்றுவந்த அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி நாகரிகம்’ குறித்து 2013-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த பல அரசியல் குறுக்கீடுகளால் அவர் மாற்றப்பட்டார்.

கீழடி அகழ்வாராய்ச்சியின் முழுமையான அறிக்கையையும் அவர் தயாரிக்கக் கூடாது என உத்தரவு வந்தது. இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரபாகர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தபோது, மத்திய தொல்லியல் துறை 7 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2,300 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்துள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமர்நாத் ராமகிருஷ்ணனையே முழு அறிக்கையையும் 7 மாதங்களுக்குள் தயாரிக்க உத்தரவிட்டார்.

மேலும், மத்திய தொல்லியல் துறை கீழடியில் இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியின் அறிக்கைகளைத் தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.