கோவை: ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என தெரிவித்துள்ள புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார். அவரது கருத்துப்படி, ஆளுநர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்புதான், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன், திரு இல கணேசன் ஆகியோர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவதாக மாநில பாஜக முன்னாள் தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், நம்முடைய தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று பேர் நாட்டின் மூன்று மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது ஒட்மொத்த தமிழ் இனத்தற்கு கிடைத்த பெருமையாகும். ஆளுநராக பொறுப்பேற்கும் தேதி இரண்டொரு நாட்களில் முடிவாகும் என்றார்.

மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகளவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் அடிதட்டில் இருப்பவர்கள். அவர்களின் மேன்மைக்கு உழைப்பது தான் தமிழ்நாட்டின் பெருமையாக இருக்கும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் ஜார்கண்டிற்கு இடையே ஒரு புதிய உறவை, ஒரு இணைப்பை, ஒரு பாலத்தை உருவாக்குவோம். அத்தகைய சூழலில் மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சியை உருவாக்குவோம்.

ஆளுநர் என்பவர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்காக வாதாடுவது நியாயம். ஆனால் அவரே நீதிபதி ஆகிவிட்டால் நீதியை மட்டும்தான் தர வேண்டும். அரசியலின் பரிணாம வளர்ச்சியாக ஆளுநர் என்கிற உயர்ந்த பதவியை அடைகிறோம். அதன் பின்னர் அரசியலில் நாட்டம் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்தில் நாட்டம் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசியல் களத்தில் புகுந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, மாநில அரசுக்கு எதிராக பேசி வரும் நிலையில், புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ராதாகிருஷ்ணன், கவர்னர் ஆர்என்ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, அவர் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தி உள்ளார்.