சிதம்பரம்: சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளுக்கு “சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று விமர்சித்தார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் இன்று தனது வேட்பு மனுவை இன்று ( மார்ச் 27 ) தாக்கல் செய்தார். தனது வேட்பு மனுவை, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தேபோது, “பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. பாஜகவுக்கு ஆதரவான கட்சிகளுக்கு உடனடியாக சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது. தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நேர்மையோடு நடத்த வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் காக்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக ஒரு பூஜ்ஜியம். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே கூறியுள்ளார். தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கடும் தோல்வியை சந்திக்கும்” என விமர்சித்தார்.
[youtube-feed feed=1]