சென்னை:
க்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது.

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அண்ணாதுரை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அந்த நிலத்திற்கு பட்டா கோர உரிமையில்லை என்றும், பட்டா வழங்கினால் ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது போல் ஆகிவிடும் எனவும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், நிலத்தை வகைமாற்றம் செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது என உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்புகளை தடுக்காததால், அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள்,அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய் துறை அதிகாரிகளின் கடமை என்றும், அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது என்றும் குறிப்பிட்டனர்.

ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்நீதிமன்றம் உதவாது என எச்சரித்த நீதிபதிகள், பட்டா கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.