சென்னை

ஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

தஞ்சாவூருக்குப் பெருமை சேர்க்கும் பிரகதீஸ்வரர் கோவில் பெரிய கோவில் என அழைக்கப்படுகிறது.   சோழமன்னன் ராஜராஜனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட இந்த பெரிய கோவில் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.   இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மு க ஸ்டாலின், “வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவில் திருக்குட முழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோவில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது.

கோவில்களில் தமிழ் வழிபாட்டையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவது என்பது தொடர்ச்சியான பண்பாட்டுப் போராட்டமாகும். முத்தமிழறிஞர் தலைவரின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொன்மைமிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களான பல கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகம் என்ற வடசொல்லை நீக்கி குடமுழுக்கு என்ற தமிழ்ச் சொல்லைப் பரவலாக்கியதும் கழக அரசுதான்.

தமிழில் அர்ச்சனை என்பதில் தொடங்கி அனைத்து சமுதாயத் தமிழர்களும் அர்ச்சகர்களாவதற்கான சட்டம் வரை திருக்கோவில்களில் தமிழர் வழிபாட்டு முறையை நிலைநாட்டுவதில் தி.மு.க அரசு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டதையும், அந்த முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் தி.மு.க அரசு நடத்திய சட்டப்போராட்டங்களையும் நாடறியும்.

தொல்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்டிடும் முயற்சிக்கான போராட்டங்கள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. அந்த வகையில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்த வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இந்த மாநாட்டின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.