வெண்ணந்தூர்

தினகரன் அணியை சேர்ந்த தங்கத்தமிழ்ச்செல்வன் தினகரன் கட்சி ஆரம்பித்தால் சேரமாட்டோம் என அறிவித்துள்ளார்.

நேற்று எம் ஜி ஆர் பிறந்த நாள் விழாவை ஒட்டி வெண்ணந்தூரில் ஒரு பொதுக்கூட்டம் நடை பெற்றது.  இதில் தினகரன் அணியை சார்ந்த தங்கத் தமிழ்ச் செல்வன் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர், “எங்கள் அணியினர் முதல்வரை மாற்றம் செய்ய ஆளுனரிடம் மனு கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை.   அதற்காக 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப் பேரவை தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  விரைவில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.    தீர்ப்பு குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.   தீர்ப்பு எப்படி வந்தாலும் மகிழ்ச்சியே.

துரோகிகளான ஓ பன்னீர்செல்வம் போன்றவ்ர்களுக்கு அமைச்சர் பதவி, அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆதரவு தெரிவித்தால் தகுதி நீக்கம்.  இது போன்ற செயல் முறையாகுமா?   நாங்கள் தினகரன் தலைமையில் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்.

தினகரன் புதிய கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் அதில் சேரவே மாட்டோம்.   ஏனெனில் நாங்கள் என்றும் அதிமுக உறுப்பினர்களே.

சினிமாத் துறையினர் கட்சி அமைக்க ஆசைப்படுகிறார்கள்.    அவர்கள் ஆரம்பிக்கலாம்,   ஆனால் மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்”  என தங்கத் தமிழ்ச் செல்வன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.