கோவை

கொரோனா பரவல் அதிகரிப்பால் கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெறுகிறது.

தற்போது சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இங்கு கே.பி.1 மற்றும் கே.பி.2 எனப்படும் 2 வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் போல் இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 21-ந்தேதி நிலவரப்படி நாட்டில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவை விமானநிலையத்தில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.