சென்னை:  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், இளநிலை உதவியாளர் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் குறித்து நடவடிக்கையை சரியாக செய்யாவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், “பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர் அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின், ஆசிரியரல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து விதிகளுக்குப்பட்டும், தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை விதிமுறைகள் படி காலதாமதமின்றி அலுவலக தலைவரான தலைமை ஆசிரியருக்கு கோப்புகளை சமர்ப்பிக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

தபால்களை அலுவலக தலைவரான தலைமை ஆசிரியர் மூலமாக பெறப்பட்டவுடன் அவற்றை, முறையாக தன்பதிவேட்டில் பதிவு மேற்கொண்டு உதவியாளர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் 15ஆம் தேதிக்குள் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுவதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வின் போது அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின், ஆசிரியரல்லாத பணியாளர்களின் கோரிக்கைகள் உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் விண்ணப்பம் நடவடிக்கையின்றி கிடப்பில் போடப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளியின் இளநிலை உதவியாளர், உதவியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடம் காலியாக இருந்தால் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு மனு ஒன்றை அளித்திருந்தது. அந்த மனுவில், “முதுநிலை ஆசிரியர்களின் பணபலன் சார்ந்த தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துரு தயாரித்தல் மற்றும் அதுசார்ந்த அமைச்சுப்பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்துக் கொடுத்தால் மட்டுமே பெற்றுத் தரப்படுகிறது.

அவ்வாறு அந்த ஆசிரியர்கள் செய்யவில்லை எனில், அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்களை கூடுதல் பணியாக அமைச்சுப்பணிகளையும் மேற்கொண்டு தங்களுக்குரிய பணபலன்களை பெறும் அவலநிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.