மதுரை: தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது என மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  குற்றம் சாட்டினார். மேலும்,   கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

இந்திய தொல்லியல் துறை சார்பில் மதுரையில் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். விழாவில் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர், “தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக சிற்பங்களாக வடித்துள்ளனர். பழங்கால தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்துள்ளது மனதுக்கு வேதனையாக உள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கும் குடைவரை கோயில்களுக்கும் நெடிய தொடர்புகள் உள்ளன. குடைவரை கோயில்களில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ் மொழியின் ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்புள்ளன.

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்தான். அதனை நாம் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் மருத்துவர், பொறியாளர் ஆகலாம். ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து பாதுகாக்க வேண்டும். மேலும் நமக்கு அருகிலுள்ள பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் பல்வேறு இடங்களுக்கு சென்று அனைவரும் அதனை பார்வையிட வேண்டும். தமிழகத்தில் நமது பாரம்பரியத்தை எடுத்து சொல்வதற்கான வாய்ப்பு இல்லை. சில சமயம் அதில் அரசியல் நுழைந்து, சர்ச்சைகள் உருவாகிறது.

நமது கோயில் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர். கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை.  வெளிநாடு அருங்காட்சியகத்தில் இருக்கும் கோயில் சொத்துக்களை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம்.

இவ்வாறு பேசினார்.