ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு, இதற்காக  இன்று போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்.  தெரிவித்ததாவது:

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எனது வீட்டுக்கு போராட்டம் நடத்த வருவோர் வரலாம்.  இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தராவிட்டால் பிற பிரச்சினைகளில் தலையிடமாட்டேன்.  நடிகர்கள் தமிழர் பிரச்சினைக்கு வருவதில்லை என்று  சொல்பவர்கள் இன்று போராட வரட்டும்.

நான் போராட அழைப்பதால் அரசியலுக்கு வரப்போகிறேன் என வதந்தி கிளப்பிவிடாதீர்கள். பேப்பரில் கையெழுத்து போட்டு வேண்டுமென்றாலும் தருகிறேன், நான் அரசியலுக்கு வரமாட்டேன்.

 

நான் இன்று போராட்டம் நடத்துவேன். என்னை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும்.  முடிந்தால் என்னை தடியடி நடத்தி கலைக்கட்டும்.

 

அனைவரும் அவரவர் வீட்டு முன்பு 10 நிமிடம் மவுனமாக நில்லுங்கள். பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் அப்படியே 10 நிமிடங்கள் நில்லுங்கள். தமிழர்கள் அநாதை இல்லை என்பதை நிரூபிக்க திரளுங்கள். உங்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு மக்களே. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனித்தனியாக போராடுவதால் பலன் கிடைக்காது. தனித்தனியாக போராடுவதால்தான் போலீசாரால் தடியடி நடத்தி கலைக்க முடிகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் போராட்டத்தை புது வகையில் எடுத்து செல்லுங்கள்.

 

தமிழன் என்று பெருமையுள்ளவர்கள் தனித்தனியாக போராடாதீர்கள். 12ம் தேதி (இன்று )  மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துவேன்.  அப்போது 10 நிமிடங்களுக்கு நான் மவுன விரதம் இருக்கப்போகிறேன்.

 

எனக்கு சோறுபோட்ட என் மக்கள் பிரச்சினைக்காக நான் போராட வருவேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்திருக்க கூடாது. நமது கலாசாரத்திற்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்தது தவறு. போலீசார் அன்று யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு  விடுமுறை போட்டிருக்கலாம்.

 

சிம்பு -மாட்டை கொடுமைப்படுத்துவதாக  சொல்பவர்களிடம் கேட்கிறேன்…  மாடு தனது கன்றுக்கு வைத்த பாலை கறந்து குடிப்பவர்களுக்கு இதை கேட்க என்ன தகுதியுள்ளது? செடி, கொடி கூட உயிரோடு உள்ள தாவரம்தான், ஏன் அதை சாப்பிடுகிறீர்கள்?  எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று? நாங்கள் மனிதர்கள் இல்லையா?  மனிதாபிமானம் இல்லாத ராட்சதர்களா நாங்கள்?

 

நம்ம ஊரில் பிறந்த முட்டாள்கள் இப்படி கேள்வி கேட்கிறார்கள். கலாச்சாரம் தெரியாமல் என்னங்க பிள்ளை வளர்த்திருக்கீங்க?.” இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.