சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டமுன்வடிவை எதிர்க்க முன்வருமாறு 9 கடலோர மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, குஜராத், மகாராஷ்ட்ரா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், தற்போது நடைமுறையில் உள்ள துறைமுகங்கள் சட்டம் 1908ன் படி, சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

‘அந்த கடிதத்தில், கூறியிருப்பதாவது,

“மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து உங்களின் கவனம் தேவை. சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘இந்திய துறைமுக மசோதா 2021’-ஐ உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க ஜூன் 24 அன்று மாநில முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் (MSDC) அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கெனவே உள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-ன்படி, திட்டமிடல், மேம்பாடு, ஒழுங்குபடுத்துதல், சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய மசோதா இதனை மாற்றுவதாக உள்ளது. இந்த அதிகாரங்களை எம்.எஸ்.டி.சி-க்கு மாற்றுவதாக அமைந்துள்ளது. எம்.எஸ்.டி.சி இதுவரை ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே உள்ளது. மேலும், மாநில அரசின் அதிகாரங்கள் பல ஒன்றிய அரசுக்குச் செல்லும் வகையில் புதிய மசோதா அமைந்துள்ளது.

ஏற்கெனவே உள்ள சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால், புதிய மசோதா சிறு துறைமுகங்களை நிர்வகித்தலில், நீண்டகால பாதகமான விளைவுகளை உருவாக்கும். ஏனெனில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநில அரசு இதில் எந்தவொரு முக்கியப் பங்கையும் ஆற்ற முடியாது. நாங்கள் ஏற்கெனவே இந்த விவகாரத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் கொண்டுசென்றுள்ளோம். மாநிலத் தன்னாட்சியை இதன் மூலம் குறைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

எனவே, இப்புதிய மசோதாவுக்கு அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இப்புதிய மசோதாவுக்கு எம்.எஸ்.டி.சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் மாநில அரசால் சிறு துறைமுகங்களின் மேல் எந்தவித அதிகாரத்தையும் செலுத்த இயலாமல் போய்விடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.