சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை ரூ.1000 உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு பட்ஜெட் மின்மினிப்பூச்சி, மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது என கடுமையாக சாடி உள்ளார்.

தமிழக சட்டபேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பட்ஜெட் வாசிக்க எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்தனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர்   சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

அப்போது, என்எல்சி விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலைக் கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல் படுத்தாதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  மாநிலத்தில் வரி வருவாய் அதிகரித்துள்ளது. பற்றாக்குறையே இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், பற்றாக்குறை 30,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் குறைந்துள்ளது எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

திமுக அரசு மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்தியுள்ளனர்; இது தான் அவர்கள் மக்களுக்கு அளிக்கும் பரிசு”

மகளிருக்கான உரிமைத் தொகை எல்லோருக்கும் வழங்கப்படும் என்றார்கள். ஆனால், இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்கிறார்கள். என்ன தகுதி என்பதை வெளியிடவில்லை”.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் மின்மினிப்பூச்சிபோலத்தான் உள்ளது. இது, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது என்றார்.

மேலும், நீட் விலக்கு ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என  கிண்டலடித்தார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர். அப்போது,   கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டதாக சொன்னார்கள் ,  அதை ஓ.பி.எஸ்சின் திறமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாமா?” என செய்தியாளர் கேட்டதற்கு, “அது எப்படி, அப்போது நான்தானே முதலமைச்சர்? நிதி ஒதுக்குவதுதான் அவர். மீதியெல்லாம் கூட்டுப்பொறுப்புதான்” என கூறினார்.