சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.

வரும் 20ந்தேதி அனைத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

சென்னை மெரினாவில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுடன் காவல் உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். சென்னை மாநகர கூடுதல் காவல்த்துறை ஆணையர் சங்கர் 6-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், போராட்டக்காரர்கள் முதல்வர் வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் போராட்டத்திற்கு தமிழ் நடிகரான நடிகர் சிம்பு தனது ஆதரவை முதன்முதலாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்த  நடிகர் சூர்யா, விஜய் போன்றவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர். மேலும் பல திரையுலக பிரமுகர்கள் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று வருகின்றனர்.

நடிகர் லாரன்ஸ், மன்சூர்அலிகான் போன்றவர்கள் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.

நடிகை நயன்தாரா,  இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்த தருணத்தில் பிறப்பால் இல்லா விட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலை நிமிர வைக்கிறது.

இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது.

நான் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிட்டாலும், எனக்கு ஒரு அங்கீகாரதத்தையும், அடையாளாத்தையும் பெற்று தந்தது இந்த தமிழ் மண்ணும், தமிழ் மக்களும்தான்.

இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது.