மதுரை: மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம்  ஆக்க உத்தவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் மதுரை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டில் 2016 மார்ச் மாத நிலவரப்படி 1128 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும்  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதில்,  சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் கட்டாயம். ஆனால், மாநில மொழியான தமிழுக்கு இடமில்லை.

இதுதொடர்பாக  தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந் திருந்தார். அதில்,  அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றும்,  இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத பிற மொழிபேசும் மாணவர்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது உறுதியாகிறது. இலவசக் கல்வி எனும் பெயரில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவதுபோல் தெரிகிறது. தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ, அந்த மாநில மொழியை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த விசாரணையின்போது,  அப்போது மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும் போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆகவே அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது.

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், தமிழ் ஒரு பாடமாக உள்ளது. தமிழை பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் அதனை தேர்வு செய்து பயிலும் வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்தியஅரசின் வாதத்தை ஏற்று, தமிழ் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.