சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன்  நான் என கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக சுதந்திர தின விழா கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும்  சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டையில்  முதல்வர் ஸ்டாலின்  இரண்டாவது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகையை வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில்,  உரையாற்றிய மு.க.ஸ்டாலின்,.  “சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் வரலாறு நீண்ட நெடியது. எளிமை, நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்; தமிழ் மண் தான் மகாத்மா காந்தியாக மாற்றியது. காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண்.

ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கப்போவதாக சென்னையில் தான் காந்தி அறிவித்தார். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய,அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக்கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.

சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர். இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.  விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ₹2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

அனைத்து காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்துச் செயல்படுத்தி வருகிறோம்; இதற்கு காரணம் நான் மக்களோடு மக்களாக வளர்ந்தவன், மக்களால் வளர்க்கப்பட்டவன். பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்.

ரூ 2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம்; தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன்.

கட்டணமில்லாப் பேருந்து வசதி மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் அதிகமாகி இருக்கிறது; ஒராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது.

ஆளும்கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை, முதலமைச்சர் என்ற வகையில் அனைத்து தொகுதியும் எனது தொகுதிதான்; ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக்கூடாது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி வருகிறேன்.

இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என வானத்தை நோக்கி பட்டொளி வீசிப்பறக்கும் தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.