சென்னை; பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர். திராவிடர் கழகத்தினரின் புகாரின்பேரில் காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறு பேசும் தி.க.க உள்பட பல்வேறு அமைப்புகள் மீது புகார் கூறியும் காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை என்பது விமர்சினத்துக்குள்ளாகி வருகிறது.

இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாதமாக ‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம்’ என்ற தொடர் பிரசாரத்தை நடத்தி வருகிறது. இந்தப் பிரசார பயணம் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னை மதுரவாயலில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, “ஸ்ரீ ரங்கநாதனைக் கும்பிட ஒரு லட்சம் பேர் சாமி கும்பிட்டுவிட்டு வருகிறார்கள். அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை, கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலை. அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்,” என்று பேசினார். அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.

இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் புதுச்சேரியில் தங்கியிருந்த  கனல் கண்ணனை இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே இந்துக்கள், இந்து தெய்வங்கள்மீது அவதூறு பரப்பிய தி.க உள்பட பல்வேறு அமைப்புகள் மீது காவல்துறையில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பெரியார் சிலை குறித்து பேசிய கனல்கண்ணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் எதேச்சந்திகார போக்கு என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அதுபோல, கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடந்த  செஞ்சட்டை பேரணியில்,  இந்து மத கடவுள்கள் பற்றி அவதூறு கோஷங்கள் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தன.  மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது,  செஞ்சட்டை பேரணியில் பங்கேற்ற தி.க.வினர் மீது மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்ததாகவும், . அவர்கள் மீது153(ஏ)-மதம், இனம், மொழி, ஜாதி, சமயம் சம்பந்தமாக விரோத உணர்வுகளை தூண்டுதல், 295(ஏ)-மத நம்பிக்கையை அவதூறு பிரசாரங்கள் வாயிலாக இழிவுபடுத்துதல், 505 (ஏ)-ஒருவர் சார்ந்த மதத்துக்கு எதிராக பகை-வெறுப்பு எண்ணங்களை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

ஆனால், அதன்மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனார் பெரியார் குறித்து பேசிய கனல்கண்ணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஒருதலைப்பட்சமாக செயல்படும்,  திமுக அரசுமீதான நம்பகத்தன்மை பொதுமக்கள் மத்தியில் பொய்த்து வருகிறது.