சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதார அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று  காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பாக கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான நிலைப்பாடு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைத்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் தேவை என்றும் வலியுறுத்தினர்.

தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட விஷயங்களை விளக்கியுள்ளனர். இது குறித்த தெளிவான எழுத்துப்பூர்வ அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.