திருச்சி: தற்போதைய தமிழகஅரசின் பாடத்திட்டம் சிபிஎஸ்இ-க்கு இணையானது  என்றும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுகூ பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், ஆய்வகம் உள்ளிட்டவைகளையும், பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாகவும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்றார்.

கடந்த காலங்களில் பாடத்திட்டத்தை பொறுத்த வரை 10, 12 ஆண்டுகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்ற அளவில் தான் இருந்துள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரை இன்றைய காலத்திற்கு எற்றார் போல் பாடதிட்டம் இருக்க வேண்டும். அதன்படி தான் தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக நம் பாடத்திட்டம் உள்ளது.

நமது பாடத்தை சிறப்பாக மாணாக்கர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வகையில்,  ஆசியர்களுக்கு இன்னும் அதிகமாக பயிற்சி கொடுக்க வேண்டும். அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  வரும் காலங்களில் தமிழக பாடத்திட்டம் சிறப்பிற்குரிய வகையில் இருக்கும்.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு  நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்படும்.

வாட்சப் வாயிலாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 மதிப்பெண்களுக்கு மாத இறுதியில்  அலகுத்தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.