சென்னை:
மாற்றிமாற்றி கூட்டணி வைத்து நமக்கு எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை எனவே வரும் தேர்தலில் நமக்கான வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் வியூகத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை இப்பொழுது இருந்து செய்ய ஆரம்பியுங்கள் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுக்கு காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் காணொளி மூலம் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது கொரோனோ காலத்தில் தேமுதிக செய்து வரக்கூடிய நலத்திட்ட உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் வரக்கூடிய தேர்தலில் தேமுதிக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை பெறவேண்டும். அதற்கேற்ப பணிகளை தற்போதே துவங்க வேண்டும் என ஆலோசனை கூறினார்.

”குறிப்பாக ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்துவைத்து, கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது. தேமுதிக கட்சிக்கோ அல்லது தேமுதிக தொண்டர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. எனவே வரக்கூடிய தேர்தலில் கூட்டணி இருக்கிறதோ இல்லையோ எப்படி தேர்தல் அமைந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறினார். எனவே இனி வரக்கூடிய தேர்தல்களில் தேமுதிக வெற்றி பெறவேண்டும். நம் நிர்வாகிகள் வெற்றி பெறவேண்டும் என்ற விதத்தில் வியூகம் அமையுங்கள்” என ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு விஜயகாந்த் ஆலோசனை வழங்க உள்ளதாகவும் பின்னர் கொரோனோ பரவல் குறைந்த பிறகு நேரில் ஆலோசிக்கலாம் எனவும் தெரிவித்தார்.