சேலம்:
மிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 49 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பொதுமக்களுக்கு அரிசி வழங்க தி.மு.க. சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சியில் நேற்று மாலை ரேஷன்கார்டுதாரர்கள் சுமார் 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கினார்.

இந்நிலையில், 2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரத்திலும், அதன்பிறகு 10.30 மணிக்கு ஓமலூர் தொகுதியில் ஓமலூர் பேரூராட்சியிலும், 11 மணிக்கு மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணியூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கினார்.

பின்னர் பொதுமக்களுடன் பேசிய அவர்,
இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் மாற வேண்டும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.