வேலூர்:: தமிழ்நாடு குறித்து கவர்னர் ஆர்என்.ரவி பேசிய கருத்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கவர்னரின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே வேளையில் கமல்ஹாசனின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

வேலூர் சத்துவாரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி,  தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை வேறு கலாச்சாரத் தில் உள்ளனர்.  கவர்னர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது. தமிழகம் என சொல்ல வேண்டும் என கூறுகிறார். தமிழகத்தை எப்படி அழைக்க வேண்டும் என கவர்னர் சொல்லித்தர வேண்டாம். தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு.

இதுபோன்ற பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம். தமிழ்நாடு, ஆந்திர நாடு என பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. இந்தியா ஒரு தேசம். நாடு என்பது வேறு தேசம் என்பது வேறு.  நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம் என்று நாம் சொல்லுகிறோம். அனைவரும் சேர்ந்ததுதான் இந்தியா. இதனால்தான் இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என மகாத்மா காந்தி தெரிவித்தார். இவையெல்லாம் கவர்னருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த கவர்னர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகநாம் கொதிப்படைய வேண்டாம்.

இந்துக்களின் திருவிழாக்களுக்கு முதல்வர் வாழ்த்து சொல்வாரா என பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர் தமிழர் திருநாள் என்று சொல்லக்கூடிய பொங்கல் தமிழர் பண்டிகை இந்து பண்டிகைதானே. இதற்கும் வாழ்த்து சொல்கிறோம் அல்லவா.

பா.ஜ.க.வினர் தமிழர் பண்டிகையை பொங்கல் பண்டிகையாக கருதவில்லையா. பொங்கல் பண்டிகை வெளிநாட்டு கலாச்சாரத்தில் இருந்து வந்ததா. பொங்கல் என்பது இந்து கலாச்சாரத்தில் இருந்து வந்தது தான். இந்து மதத்தில் தான் நாம் இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை வேறு கலாச்சாரத்தில் உள்ளனர். கலாச்சார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

கமல்ஹாசன் ராகுல் காந்தி சந்திப்பு வரவேற்கக்கூடிய ஒன்று. கமல்ஹாசன் தேசிய உணர்வுடைய தலைவர், நல்ல மனம் படைத்தவர். சீர்திருத்த கருத்துகளை உடையவர். இன்றைய நிலையில் ராகுல் காந்தி போன்ற தலைவர் தான் இந்தியா போன்ற தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடு தான் அவருடன் அவர் நடைபயின்று உள்ளார். அவரோடு கருத்து பரிமாற்றத்தை செய்துள்ளார். ராகுல் காந்தி கமல்ஹாசன் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.