டெல்லி: அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில், இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.  இதை கவுரவிக்கும் வகையில்  மத்தியஅமைச்சர் மான்சுக் மாண்டவியா தமிழகஅரசுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில், இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகஅரசுக்கு விருது வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்து மக்களுக்கும் தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்’, இதனை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ம் தேதி ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்’ என்ற குறிக்கோளை கொண்டு உத்தரபிரதேசம், வாரணாசியில் ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம்’ கொண்டாடப்பட்டது.

ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த இந்த நிகழ்வில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் அக்டோபர் 12ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை 22,58,739 தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதில் சாதனை புரிந்து தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

இதற்கான பாராட்டு சான்றிதழும், கேடயமும் தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷுக்கு ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கவுரவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.