சென்னை: 13 கிராமங்களை அழித்து அமைக்கப்பட இருக்கும் பரந்தூர் விமான நிலையம்  அமைப்பதற்காற  நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை துவக்கி உள்ளன. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கிடையில், பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமம் முழுவதும் அகற்றப்பட உள்ள ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக  நடத்தி வருகின்றனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, அந்த பகுதியில் உள்ள ஊர்களுக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்கும் வகையில், காவல்துறையினரை குவித்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் தற்போது பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடும், நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது, பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 2.77..76 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர் , புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற எழுத்து முகவரியில் எழுத்து மூலமாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 326 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத் ததமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த அக்டோபர் இறுதியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.