சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 202 வழக்கறிஞர்கள் தற்காலிக நியமனம் செய்வது தொடர்பான  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் 9 பேர் உள்பட 202 வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.  தொடர்ந்து ஏராளமான வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர் . தலைமை வழக்கறிஞர் பரிந்துரையின் பேரில், நீதிமன்றங்களில் அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் 202 வழக்கறிஞர்கள் நியமிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மதுரைக் கிளைக்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், சென்னை மற்றும் மதுரைக்கு தலா 1 அரசு பிளீடர் (அரசு வழக்கறிஞர்), 33 அரசு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் 55 அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 191 அரசு வழக்கறிஞர்களுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டுள்ளன.

பதவிகளுக்கு ஏற்ப 10 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவமுள்ள வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஜூலை 29ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பொதுத்துறைக்கு பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுய விவரக்குறிப்பு மற்றும் ஆவணங்களுடன், 25 ஆண்டுகள் அனுபவமுடைய மூத்த வழக்கறிஞரிடமோ அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கத்திடமோ அனுபவம் குறித்த கடிதத்தை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.