மதுரை: தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து  மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதி மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்,  இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என  ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில்,   பாக். கடற்படை தாக்குதலில் குஜராத் மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு, தமிழக மீனவர்கள்  68 பேர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களை  மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீது, மருத்துவ பரிசோதனை என்ற பெயரில்   கிருமி நாசினி தெளித்து கொடுமை படுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் . நீதிமன்றம் தலையிட்டு 68 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..?  என மத்திய மாநில அரசுகளுக்கு என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுகுறித்து,  இலங்கை அரசை தொடர்பு கொண்டு மத்தியஅரசு பேசி வருகிறது என்றார்.  இதையடுத்து, இந்த விவகாரத்தில்  மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,  மீனவர்கள் 68 பேரை ஜனவரிக்குள் மீட்டு வாருங்கள் என்று கூறிய நீதிபதிகள்துடன், வழக்கை டிசம்பர் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.