சென்னை: இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்றும்,  இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். இதற்கு தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று மாநில பாஜக அலுவலகமான சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்ளை சந்தித்த மாநில தலைவர் அண்ணாமலை, இந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. பாஜகவும் இந்தி திணிப்பை விரும்பவில்லை. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது. தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று. இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்றால் தமிழ் பள்ளிகளை திறக்க மாநில முதல்வர்களுக்கு அரசு கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவரிடம் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  மத்திய பல்கலைகலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு 2010-ஆம் ஆண்டு. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்க,  பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கான வாட் வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.