தேசிய தடகள போட்டியில் ‘ட்ரிபிள் ஜம்ப்’ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனா ரவி தேசிய சாதனை படைத்துள்ளார்.

சிஐஎஸ்சிஇ பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் நடைபெற்று வருகிறது.

இதில் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் சென்னை அடையார் செயின்ட் மைக்கேல் பள்ளியைச் சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவி சாதனா ரவி முதலிடம் பிடித்தார்.

11.45 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்த இவர் முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார்.

தேசிய அளவில் சாதனை புரிந்துள்ள இவர் தடை தாண்டும் ஓட்டத்தில் முன்னாள் தேசிய சாம்பியனான எம். வி. ராஜசேகரிடம் பயிற்சி பெற்றுவருகிறார்.

இதற்கு முன் 10.99 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்த நிலையில் தற்போது சாதனா 11.45 மீட்டர் தாண்டி சாதனை புரிந்துள்ளார்.

தேசிய அளவில் சாதனை படைத்து முதலிடம் பிடித்துள்ள தமிழக வீராங்கனை சாதனா ரவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.