சென்னை: அன்றாட கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனையில், ஒரேநாளில் 10,000 பேர் என்ற எண்ணிக்கை அளவை எட்டியுள்ளது தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அன்றாடம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் இதுவரை 1000 பேருக்கும் மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் நடத்தப்படவில்லை மற்றும் அதற்கான போதிய கட்டமைப்புகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன.
இந்நிலையில், அன்றாட கொரோனா பரிசோதனைக்கு உட்படுவோரின் எண்ணிக்கை 10,000 என்ற அளவை முதன்முறையாக எட்டப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மே 2ம் தேதியான சனிக்கிழமை மட்டும், மாநிலமெங்கும் உள்ள 47 பரிசோதனை மையங்களில் மொத்தமாக 10,127 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.