தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

முரளி தலைமையிலான அணி, மன்னன் தலைமையிலான அணி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

அரசாங்க உதவி, நட்சத்திர கலைவிழா, சிறு முதலீட்டு படங்களுக்கு அரசு மானியம், அரசு மூலம் வீட்டு வசதி சலுகைகள் என தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து தயாரிப்பாளர்கள் வாக்கு கேட்டு வந்தனர்.

இதில் மன்னன் தலைமையிலான அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் லிப்ரா ரவீந்தர் புதுவிதமான வாக்குறுதி அளித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

லிப்ரா ரவீந்தர், “கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அரசிடமும், நடிகர்களிடமும் உதவிக்காக ஏன் கையேந்த வேண்டும். கொடுக்கிற நிலையில் இருப்பவர்கள் பிறர் உதவிக்காக கையேந்த கூடாது.

நாம் தயாரிக்கும் திரைப்படங்களை சங்கத்தின் சார்பில் படங்களுக்கு இருக்ககூடிய அத்துணை வியாபார வாய்ப்புகளையும் பயன்படுத்தி செய்து கொடுக்க வேண்டும். இதனால் எந்த படமும் நஷ்டமடையாது.

தவிர இந்த வேலைகளை முறைப்படி செய்ய சேவை கட்டணம் பெறலாம். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும்” என சினிமா விழா மேடைகளில் பேசிவந்தார்.

மேலும், “நான் தயாரிக்கும் திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதியாக தருவேன்” என்றும் கூறிவருகிறார்.

இது வழக்கமான அறிவிப்பாக இல்லாமல் இருப்பதை அடுத்து இருதரப்பும் போட்டிபோட்டு சங்க உறுப்பினர்களை கவர வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.