சென்னை

நேற்று இரவு முழுவதும் எந்தெந்த கட்சிகள் யார் யாருக்கு என்னும் பேச்சுவார்த்தை அதிமுக  தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.   தொகுதி உடன்படிக்கை ஏற்படாததால் தேமுதிக கூட்டணியை விட்டு விலகி உள்ளது.   தற்போது இந்த கூட்டணியில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளே முக்கிய கட்சிகளாக உள்ளன.

இந்நிலையில் எந்த தொகுதியில் ஒவ்வொரு கட்சியும் போட்டியிடுவது என்பது குறித்து நேற்று இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை தொடங்கியது.   இந்த பேச்சு வார்த்தையில் முதலில் பாஜக கலந்துக் கொண்டது.  இந்த கட்சியின் சார்பில் கிஷன் ரெட்டி, எல்.முருகன், அண்ணாமலை, கேசவ விநாயகம் ஆகியோரும் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் இருந்தனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தையில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், பாஜக போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகி விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.

அதன் பிறகு பாமக சார்பில் நடந்த பேச்சுவார்த்தை யில் ஜி.கே.மணி உள்ளிட்டோர், ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருடனும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோருடனும்பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

நடந்து முடிந்த பேச்சுவார்த்தையில், பாமக கேட்ட தொகுதிகள் கிடைத்திருப்பதாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிறகு, ஓபிஎஸ் – ஈபிஎஸ், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி ஆகியோர், அதிமுக சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். நேற்றிரவு 9:20 மணியளவில் தொடங்கிய தொகுதிகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள், மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை விடிய விடிய நீடித்தன

தொகுதிகள் உறுதி ஆனபடியால் இன்று அதிமுக அணியின் தொகுதிப் பட்டியல் மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.