சென்னை:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தினர், “சுவாதிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர கொலையை அனைவரும் கடுமையாக கண்டித்துவருகிறார்கள்.
இந்த நிலையில் பேஸ்புக் உள்ளிட்ரட சமூக வலைதளங்களில் சிலர், “சுவாதி உயர்சாதியைச் சேர்ந்தவர். அதனால்தான் ஊடகங்கள் இந்த கொலைக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன” என்று எழுதி வருகிறார்கள். வேறு சிலர், “சுவாதி உயர்வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால்தான் ஊடகங்கள் இந்த கொலைக்கு முக்கியத்துவம் தரவில்லை” என்று எழுதுகிறார்கள்.
மேலும் காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்ததாகவும் யூகத்தில் சிலர் எழுதுகிறார்கள்.

சுவேதி
சுவேதி

இந்த நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர், “சுவாதியை மிக பாசமாக வளர்த்தோம். நன்றாக படித்த சுவாதிக்கு, அதற்கேற்ற வேலை கிடைத்தது. அலுவலகம், வீடு என்றே வாழ்ந்தாள். அவளது கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் சிலர் ஏதேதோ எழுதுகிறார்கள். சிலர் ஜாதி குறித்து எழுதுகிறார்கள்.
சுவாதி கொல்லப்பட்டுவிட்டாள். இறந்துவிட்டாள். அவளை இனி யாராலும் எங்களுக்குத் திருப்பித் தர முடியாது. நாங்கள் மிகவும் துக்கத்தில் இருக்கிறோம். அவளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் இருங்களேன்” என்று சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சந்தான கோபாலகிருஷ்ணனின் சகோதரர் கோவிந்தராஜன், “ காலை ஆறுமணிக்கு சுவாதி கொல்லப்பட்டிருக்கிறாள். ஆனால் எட்டரை மணிக்கு ஒரு கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்து தகவல் சொல்கிறார். இத்தனைக்கும் பிளாட்பாரத்தில் அவளது அடையாள அட்டை  கிடந்திருக்கிறது. ஒருவரும் தகவல் சொல்லவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.