சென்னை: சூரப்பா விவகாரத்தில், கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழகஅரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் என திமுக, அதிமுகவை சீண்டியுள்ளார்.

அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க தமிழகஅரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இதற்கான நடைமுறைகள் கடந்த ஒரு மாதங்களாகவே நடைபெற்று வருகின்றன.  ஆனால்,  நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்  சமீபத்தில்தான் அதுகுறித்து கருத்துதெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், சூரப்பா நேர்மையானவர், அவருக்கு துணைநிற்பேன் என்று கூறியிருந்தார்.

கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழகஅரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், திமுக அதிமுகவுக்கு பதில் அளிக்கும் வகையில் கமல்ஹாசன் அந்த கட்சிகளை விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? 
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். 
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.