சென்னை: திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான  ஊழல் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி மீதான ஊழல் வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தற்போதைய திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி,  கடந்த 2006 – 2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது,  2008 ஆம் ஆண்டு  வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முறைகேடாக அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு ஒதுக்கியதாக 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு குற்றம் சாட்டியது. மேலும், ஐ.பெரியசாமி மீது 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. இதனிடையே தி.மு.க 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிலையில், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2021ம்  ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் கீழமை நீதிமன்றம், மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை.  இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ்,  இவ்வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார். மேலும், இவ்வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தும்  உத்தரவு பிறப்பித்தார். இது திமுக அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். மேலும், ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு நாள்தோறும் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சரியான காரணங்களை ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் எனவும், விசாரணையை தள்ளி வைக்கவும் ஐ.பெரியசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஐ.பெரியசாமி கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரத்தில் ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 8)  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.